கர்நாடகவில் மேலும் 14 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கர்நாடகவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்ததையடுத்து அரசியல் குழப்பங்கள் பெரிய அளவில் தலை தூக்கத் தொடங்கியது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் சரிந்தது.
இதையடுத்து கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஆர். சங்கர், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ரமேஷ்ஜார்கி ஹோளி, மகேஷ் குமட்டஹள்ளி ஆகிய 3 பேரையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தார்.
பெரும்பான்மை பெற்ற பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் சபாநாயக் ரமேஷ்குமார் இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ்குமார் மேலும் 14 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த போது, “நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு எடியூரப்பா கேட்டுக் கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க வேண்டும். சபாநாயகராக கர்நாடகவில் நிகழும் அரசியல் சூழ்நிலைகளால் நான் மிகப்பெரிய அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளேன். இந்த விஷயங்கள் அனைத்தும் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
ரோஷன் பைக், ஆனந்த் சிங், ஹெச். விஷ்வநாத் மற்றும் எஸ்டி சோமசேகர் ஆகியோர் உட்பட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் காங்கிரஸ் உறுப்பினர்கள், 3 பேர் மஜத உறுப்பினர்கள்” என்று கூறினார்.
இதனால், கர்நாடகவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க எண்ணிக்கை 104 ஆகும். தற்போது பாஜக வசம் 105 இருப்பதால் எடியூரப்பா அரசுக்கு எந்தவித சிக்கலும் இல்லை.