122 ஆணிகளும் 10 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தன.
Addis Ababa: எத்தியோப்பியா நாட்டில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 122 ஆணிகளை விழுங்கியுள்ளார். உடல் நல பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவரின் வயிற்றில் இருந்து மருத்துவர் ஆணிகளை அகற்றியுள்ளார். இதுகுறித்து செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தாவித் தியாரே கூறியதாவது -
மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மனநலம் பாதிப்பு தொடர்பான மருந்துகளை அவர் கடந்த 2 ஆண்டுகளாக உட்கொள்ளவில்லை. இந்த காலத்தில் அவர் ஆணிகளை விழுங்கியுள்ளார். உடைந்த கண்ணாடி துண்டுகளையும் அவர் விட்டுவைக்கவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் எதையேனும் விழுங்கியிருக்கக் கூடும் என்று நினைத்தேன். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ததில் 122 ஆணிகளை எடுத்துள்ளோம். அவை ஒவ்வொன்றும் 10 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தன. அதிர்ஷ்டவசமாக ஆணிகள் எவையும் அவரது வயிற்றை கிழிக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்; உயிர்கூட பிரிந்திருக்கலாம். அவர் இப்போது குணமடைந்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.