கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் மாயமாகியுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் இருந்து கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது.
மல்நாட்டை சார்ந்த பல்வேறு பகுதிகளும், கடலோர மற்றும் கர்நாடகாவின் உள்பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்படி, ஆக.1ம் தேதி முதல் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் மாயமாகியுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 108 நிவாரண முகாம்களில் 3,244 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக 28 விலங்குகள் உயிரிழந்துள்ளன. 85 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 3,080 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுமார் 33,477 ஹெக்டேரில் விவசாய பயிர்கள் மற்றும் 34,791 ஹெக்டேருக்கு மேல் உள்ள தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குடகுவில் ஆக.5ம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து, சுமார் 2 கி.மீ தூரத்தில் தலாகாவேரியின் தலைமை பாதிரியார் நாராயண் ஆச்சரின் உடல் மீட்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பாதிரியாரின் வீடு அடித்துச்செல்லப்பட்டது.
பிரம்ஹகிரி மலைகளில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு காரணமாக காணாமல் போன ஆச்சார் உட்பட ஐந்து பேரை என்டிஆர்எஃப் அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட சடலம் பாகமண்டலாவுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அவரது சொந்த இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஆச்சரின் மூத்த சகோதரரின் உடல் ஆகஸ்ட் 8ம் தேதி மீட்கப்பட்டது.
தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஆச்சரின் மகள்களை சந்தித்த குடகு மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.சோமன்னா, பாதிரியாரின் மனைவி மற்றும் 2 உதவியாளர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பல இடங்களில், குறிப்பாக வடக்கு உட்பகுதிகளில் மழை பெய்யும் என்று தகவல்கள் வந்துள்ளன, அதே நேரத்தில் கடலோர மற்றும் மல்நாட் பகுதியில் சில இடங்களில் மழை தொடர்கிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)