Read in English
This Article is From May 13, 2019

''சீக்கிய கலவர விவகாரம்: பித்ரோடா வெட்கப்பட வேண்டும்'' - கொதித்தெழுந்த ராகுல் காந்தி!!

1984 சீக்கிய கலவரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த சாம் பிட்ரோடா நடந்தது நடந்து விட்டது என்று கூறியிருந்தார். அவரது கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

கலவர விவகாரத்தில் சாம் பிட்ரோடாவை ராகுல் காந்தி பல முறை கண்டித்துள்ளார்.

Fatehgarh Sahib:

சீக்கிய கலவரம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா வெட்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

1984-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பாக சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் புகுந்து பிரிவினைவாதிகளை இந்திய ராணுவம் கொன்று குவித்தது. இதற்கு ஆப்பரேஷன் ப்ளு ஸ்டார் என்று பெயரிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதனை செய்யும்படி ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

சீக்கிய கலவரம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா நடந்தது நடந்து விட்டது என்று கூறினார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி சாம் பித்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டித்திருந்தார். 

Advertisement

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, பித்ரோடாவை மீண்டும் கண்டித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது-

1984 கலவரம் குறித்து  பித்ரோடா கூறியது முற்றிலும் தவறானது ஆகும். அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதனை அவருக்கு போன் மூலமாக நான் தெரிவித்து விட்டேன். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் அவர் கருத்து தெரிவித்ததற்காக பித்ரோடா வெட்கப்பட வேண்டும். பொது வெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். 

Advertisement

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். 
 

Advertisement