பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி மொபைல் போனை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகப்படியான செல்போன் உபயோகம் காரணமாக, அதனை திருடும் கொள்ளையர்களின் எண்ணிக்கையும், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பணத்தை கொள்ளையடிப்பதை விட செல்போனை பறிப்பதால், அதன் மூலம் உடனடி வருமானத்தை கொள்ளையர்கள் பெறுகின்றனர்.
இந்த நிலையில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி செல்போனை பறித்த கொள்ளையர்கள் 2 பேர் பிடிபட்டுள்ளனர். டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இங்கு ஆகாஷ் என்பவர் ஹவுஸ் ரானி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது,அவரை வழிமறித்த கொள்ளையர்கள் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.
இதனால் பயந்துபோன அவர், தன்னிடம் இருந்த செல்போனை கொள்ளையர்களிடம் அளித்தார். அவர்கள் சென்றதை தொடர்ந்து இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து துரிதமாக விசாரணை மேற்கொண்ட போலீசார் வழிப்பறிக் கொள்ளையர்களை விரட்டிப்பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து செல்போன், பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.