This Article is From Mar 28, 2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 வயது வாலிபர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

“அயர்லாந்தின் டப்ளினிலிருந்து சென்னை வந்த 21 வயது வாலிபருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது"

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 வயது வாலிபர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

"தற்போது 2 கட்டாய சோதனைகளுக்குப் பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது"

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்
  • இந்திய அளவில் 800-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

தேசிய அளவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவுகளும், பூட்டுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகின்றது. ஏற்கெனவே 35 ஆக இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 38 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21 வயது வாலிபர், பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், “அயர்லாந்தின் டப்ளினிலிருந்து சென்னை வந்த 21 வயது வாலிபருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது 2 கட்டாய சோதனைகளுக்குப் பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து 14 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டிருப்பார். இந்த இளைஞரின் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவக் குழுவுக்குப் பாராட்டுகள்” என்று கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவலைச் சமாளிக்கும் வகையில், மக்கள் ஒன்று கூடுதலைத் தவிர்க்கும் விதமாக மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் செயல்படுவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரையில் மளிகைக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல், மதியம் 2.30 வரைக்கு மட்டுமே திறந்திருக்க வேண்டும். 

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.

அதே நேரத்தில் மருந்துக் கடைகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பால் சென்னையில் பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, ஜொமேட்டோ ஆகியவை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இருப்பினும் இந்த நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, காலை உணவு டெலிவரியை காலை 7 முதல் 9.30-க்குள்ளும், மதிய உணவு டெலிவரியை பகல் 12 முதல் மதியம் 2.30 மணிக்குள்ளும், இரவு உணவு டெலிவரியை மாலை 6 -லிருந்து இரவு 9 மணிக்குள்ளும் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகள் போலீசாரின் அனுமதிச் சீட்டை பெற்றிருக்க வேண்டும். மேலும், பிரதிநிதிகளின் உடல் நிலை நாள்தோறும் சோதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.