நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 227 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ள நிலையில், 102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், டெல்லியில் அதிகபட்சமாக 25 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. எனினும், கொரோனா தொற்று இன்னும் சமூக பரவல் நிலைக்கு செல்லவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினம், ஊடரங்கை நீட்டிப்பதாக வெளிந்த தகவல்கள் மற்றும் வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. மேலும், இதுபோன்ற தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, தெலுங்கானா, வரவிருக்கும் பொருளாதார வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு தற்போதே அதற்கான சூழ்நிலையை இறுக்கி பிடித்துக்கொண்ட முதல் மாநிலமாக ஆனது. அம்மாநில முதல்வர் தொடங்கி அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் குறைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் சமூக பரிமாற்றம் என்ற அபாய கட்டத்திற்கு சென்று விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இவற்றை மறுத்துள்ள மத்திய அரசு இந்தியாவில் கொரோனா பரவல், சமூக பரிமாற்றத்திற்கு இன்னும் செல்லவில்லை. உள்ளூர் பரிமாற்ற அளவில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயர் அதிகாரி லாவ் அகர்வால் கூறும்போது, சமூக பரிமாற்றம் இந்தியாவில் எங்கேயும் நடக்கவில்லை. உள்ளூர்களில், சிறிய அளவில் கொரோனா பரவி வருகிறது. அபாய கட்டத்திற்கு கொரோனா பரவல் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் அதிகபட்சமாக 25 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, கொரோனா தொற்றால் டெல்லியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 36,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
மார்ச் மாதத்திற்கு நடுவே முஸ்லீம் மத அமைப்பான தப்லீக்-இ-ஜமாத் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக்-இ-ஜமாத் கூட்டத்திற்கு பின்னர், 1,400 பேர் வரை தொடர்ந்து அங்கு தங்கியுள்ளனர். இந்த கூட்டம் நடந்த முடிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில், மார்ச்-24ம் தேதியன்று 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அந்த மதக் கூட்டத்தில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்டோருக்கு டெல்லியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் அதன் நிர்வாகிகள், அரசியல் பிரதிநிதிகள், பொதுத்துறை கீழ் பணியாற்றுபவர்கள், அரசு மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 10 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பெரும் சம்பள குறைப்பை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.