Coronavirus in TN: தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 119 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 219 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 126 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 79 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 59 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா நிலவரம் குறித்த தகவலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவாத்தார். இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர். அப்போது, “இன்று 25 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய நாளின் எண்ணிக்கையை விட குறைவானது. இதன் மூலம் கொரோனா விவகாரத்தில் அரசு துரிதமாக செயல்பட்டுவது தெரிகிறது” என்றார்.