சென்னையில், EVP Film City அருகே கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று அந்த படப்பிடிப்பு தலத்தில் பெரிய அளவிலான கிரேன் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்து உள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தின்போது அந்த கிரேன் மீது உள்ள பெட்டி போன்ற அமைப்பில் மின்-விளக்குகளைப் பொருத்தும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் NDTVக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்வின்போது இயக்குநர் ஷங்கர் அந்த இடத்திலிருந்தாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் அந்த அரங்கத்தில் வேறொரு பகுதியிலிருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
"எத்தனையோ விபத்துக்களைச் சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.