ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
கொல்லப்பட்டவர்களில் வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணராக கருதப்படும் தீவிரவாதி அப்துல் ரகுமான் என்கிற பவுஜி பாயும் ஒருவர் ஆவார்.
ஒரு மாதத்திற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்ட மிக முக்கிய தீவிரவாதியான ரியாஸ் நைகூ சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் இன்று மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக காஷ்மீரின் காவல் துறை தலைவர் விஜய குமார் கூறுகையில், 'பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரண்டாவது மிகப்பெரும் வெற்றி இதுவாகும். முன்னதாக முக்கிய தீவிரவாதி ரியாஸ் நைகூவை சுட்டுக் கொன்றோம். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை' என்றார்.
புல்வாமாவில் நடத்தப்பட்ட இந்த அதிரடி என்கவுன்ட்டரை ராணுவம், போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.
கொல்லப்பட்டவர்களில் பவஜ் பாய் என்கிற அப்துல் ரகுமான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், வெடி குண்டு தயாரிப்பு நிபுணரான அவரைக் கொன்றது பாதுகாப்பு படைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்களன்று ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொல்லப்பட்டவர்களில் சடலம் ஏதும் இன்னும் மீட்கப்படவில்லை.
கடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் ஒரு மிகப் பெரும் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்த முயற்சித்தனர். அதாவது சுமார் 40 முதல் 45 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகளை வாகனத்தில் நிரப்பி அவற்றை வெடிக்கச் செய்து தீவிரவாத தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதனை பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடித்தனர்.
கொரோனா பாதிப்பால் இந்தியா மிகப் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வரும் சூழலில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர்.