உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக கோராக்பூரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கோராக்பூர் போலீசார் அவர்களது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான புகார் "ட்விட்டரில் இருந்து வந்தது. யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பரப்புவதாக, கடந்த 3 நாட்களில் மட்டும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் டெல்லி மேற்கு வினோத் நகரில் உள்ள கனோஜின் வீட்டில் இருந்து லக்னோவுக்கு அழைத்துச் சென்ற உத்தரபிரதேச போலீசார் அவரை கைது செய்தனர்.
அந்தப் பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர் ஈஷிகா சிங், செய்தி ஆசிரியர் அணுஜ் சுக்லா, ஆகியோரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.