This Article is From Apr 23, 2019

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த (ஏப்.18) தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, இந்த தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஏப்ரல் 29-ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இதனிடையே, 4 தொகுதிக்குமான வேட்பாளர்கள் பெயர்களை திமுக ஏற்கனவே அறிவித்ததுள்ளது. அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட டாக்டர்.சரவணன், சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரவக்குறிச்சி செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன், சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

.