ஜம்மு-காஷ்மீரில் ஓர் ஆண்டுக்கு பின்னர் சோதனை முயற்சியாக 2 மாவட்டங்களில் மட்டும் தடைசெய்யப்பட்ட 4ஜி இணைய சேவை நேற்றிரவு முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 4ஜி இணைப்பு வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வரை பரிசோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் எந்நேரமும் உத்தரவு திரும்பப் பெறப்படும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேசத்தில் உள்ள 20 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் இந்த 4ஜி வசதியை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், காண்டர்பால் (காஷ்மீர்) மற்றும் உதம்பூர் (ஜம்மு பிரிவு) மாவட்டங்களில் அதிவேக மொபைல் டேட்டா சேவைகள் சோதனை அடிப்படையில் உடனடியாக மீட்டமைக்கப்படும், அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில், இணைய வேகம் தொடர்ந்து 2Gயில் மட்டுமே கட்டுப்படுத்தப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த உத்தரவில் இந்த அதிவேக இணைய சேவை போஸ்பெய்டு சந்தாதாரர்களுக்கு முதலில் வழங்கப்படும் என்றும், ப்ரீப்பெய்டு சந்தாதாரர்களின் செயல்முறை சரிபார்த்து முடித்த பின்னர் இந்த சேவையின் பயனை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆக.5ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து, மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மொபைல் போன்களில் 2ஜி இணைய சேவை வசதியானது கடந்த ஜன.25ம் தேதி மீண்டும் வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்த மாத தொடக்கத்தில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் சில பகுதிகளில் 4ஜி சேவையை மீண்டும் வழங்குவதற்கான சாத்தியத்தை ஆராயுமாறு உச்ச நீதிமன்றம் கோரியது.
இதற்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், யூனியன் பிரதேசத்தில் புதிதாக துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளதால் அதிவேக இணைய சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு மேலும் அவகாசம் கோரியது.
துணை நிலை ஆளுநராக இருந்த முர்மு ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரில் 4ஜி இணைய சேவையை வழங்குவதற்கு முர்மு தலைமையிலான நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், சர்ச்சையை சந்தித்து வந்தது. தொடர்ந்து, இணைய சேவையை மீண்டும் வழங்குவதற்கு பயங்கரவாதிகளின் நடவடிக்கை அதிகரித்து வருவதாக அவரது நிர்வாகம் காரணம் கூறி வந்தது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)