ஹரியானா மாநிலத்தின் ஃபாரிதாபாத்தில் ஒரு பெண்ணை 5 போலீஸார் சேர்ந்து அடிக்கும் சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ ஒன்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் 2 கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 சிறப்புப் போலீஸ் அதிகாரிகளின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ‘இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்துள்ளது. சம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண், எந்த விதப் புகாரையும் கொடுக்காததனால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது. அதையடுத்து, நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் இப்படியொரு சம்பவம் நடந்தது உண்மைதான் என்று தெரியவந்தது.
ஹரியானா போலீஸ் பெண்களை மதிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சொந்தத் துறையைச் சேர்ந்த நபர்களே நடந்து கொண்டாலும், அவர்கள் மீது கறாரான நடவடிக்கை எடுக்கத் தயங்காது' என்று கூறியுள்ளார்.
மாநில பெண்கள் ஆணையமும் இது குறித்து காவல் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் கான்ஸ்டபிள்கள் பால்தேவ் மற்றும் ரோகித்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் ஃபாரிதாபாத் கமிஷனர் சஞ்சய் குமார். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய எஸ்.பி.ஓ-க்களான கிருஷண், ஹர்பால் மற்றும் தினேஷை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஃபாரிதாபாத்தில் இருக்கும் ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்தில் ஐவருக்கும் எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள ஹரியானா போலீஸ் முயன்று வருகிறது. அவரிடமிருந்து வாக்குமூலம் வாங்கும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளது காவல்துறை.