This Article is From Mar 14, 2020

உலகையே அச்சுறுத்தும் கொரோனா - இந்தியாவில் பதிவான இரண்டாவது இறப்பு

குணமடைந்த பின்னர் கடந்த மாதம் வீடு திரும்பிய கேரளாவைச் சேர்ந்த மூன்று நோயாளிகள் தவிர, மேலும் 7 பேர் தற்போது குணமடைந்துள்ளனர்

நாடு முழுவதும் 42,000 பேர் சமூக கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்

ஹைலைட்ஸ்

  • மேலும் 7 பேர் தற்போது குணமடைந்துள்ளனர்
  • 42,000 பேர் சமூக கண்காணிப்பில் உள்ளனர்
  • ஐரோப்பா இப்போது உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான "மையமாக" உள்ளது
New Delhi:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய் தொற்றால் ஏற்கனவே இந்தியாவில் ஒரு முதியவர் இறந்த நிலையில் தற்போது டெல்லியில் 68 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸால் இறந்துள்ளார் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவால் இந்தியாவில் பதிவாகியுள்ள இரண்டாவது மரணம்.

இந்த பெண்மணி தலைநகர் டெல்லியில் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6வது பெண் என்று கூறப்படுகிறார், மேலும் இறந்த அந்த பெண்மணிக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்கனவே இருந்தது தெரியவந்துள்ளது. 

மேற்கு டெல்லியில் வசிக்கும் இவர், கடந்த மாதம் சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்குப் பயணம் செய்த தனது மகனுடன் இருந்தபோது இந்த நோய்த் தொற்று பரவி இறக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இவருடைய மகன் வெளிநாடு சென்று திரும்பிய ஆரம்ப நிலையில் நல்ல நிலையிலிருந்தபோதும் கடந்த மார்ச் 7ம் தேதி டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்குக் காய்ச்சல் மற்றும் இருமலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவமனைக்கு வந்த அவருக்கும், அவரது தாயாருக்கு முறைப்படி கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டு அதில் இருவருக்கும் இந்த நோய்த் தொற்றுக்கான அறிகுறி இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் அரசு தரப்பில் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்ச் 9ம் தேதி அந்த பெண்ணின் நிலை மிகவும் மோசமடைந்து, நிமோனியா எனப்படும் கபவாதம் அதிகமாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அன்று தான் அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. "மார்ச் 9, 2020 முதல், அவருக்குச் சுவாசத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன, அதன் பிறகு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சுவாசமும் வழங்கப்பட்டது. இருப்பினும், 'கொமொர்பிட்' நிலைமைகள் காரணமாக, அவர் மார்ச் 13 அன்று இறந்தார்," என்று அரசு கூறியது.

இந்த பெண்மணி இறந்த அந்த நாளில் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85ஐ தொட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வியாழன் அன்று கர்நாடகாவில் 76 வயது நபர் ஒருவர் இந்த நோயால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவில் இதுவரை "சுகாதார அவசரநிலை" என்ற நிலைக்குச் செல்லவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது சுகாதார அமைச்சகம். 

இதற்கிடையில் குணமடைந்த பின்னர் கடந்த மாதம் வீடு திரும்பிய கேரளாவைச் சேர்ந்த மூன்று நோயாளிகள் தவிர, மேலும் 7 பேர் தற்போது குணமடைந்துள்ளனர், அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்ட சுமார் 4,000 பேர் அடையாளம் காணப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும், அதே நேரத்தில் நாடு முழுவதும் 42,000 பேர் சமூக கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பா இப்போது உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான "மையமாக" உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் கூறியதன் அடிப்படையில் கொரோனாவால் இதுவரை 5000 பேர் இறந்துள்ளதாகவும், உலகெங்கிலும் உள்ள வழக்குகள் 1.34 லட்சம் என்று தெரியவந்துள்ளது. 

.