பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்துகள் மூலம் டெல்லிக்கு வரும் அனைவரும் கட்டாயம் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற விதிமுறையை அரசு மாற்றியமைத்துள்ளது. தொடர்ந்து, இந்த புதிய விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநிலத்திற்குள் வரும் மக்கள் அடுத்த 14 நாட்களுக்கு தங்களைக் கண்காணித்து, கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டால், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அல்லது தேசிய தொடர்பு மையத்தை அழைக்க வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியது.
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு கட்டுப்பாட்டு தளர்வுகள் நடைமுறைக்கு வந்ததால், டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
தற்போது டெல்லியில் 23,645 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு நாட்களில் தினசரி சராசரியாக 1,200 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. டெல்லியில் மட்டும் 120க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.
இதனிடையே, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் வருவாய் குறைந்துள்ளதாக கூறிய நிலையில், மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு ஏற்ப தொடர்ச்சியான தளர்வுகளை அறிவித்து வருகிறார். அதில் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
"குடிமக்களிடமிருந்து பரிந்துரைகளைத் கேட்டு தெரிந்துகொண்ட பின்னர் எல்லைகளைத் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் மீண்டும் ஒரு முடிவை எடுப்போம்" என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,909 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளில் தற்போது இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.