பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கத்தி மற்றும் இரும்புக் கம்பி கொண்டும் ஒரு மர்ம நபர் பொது மக்களைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் 7 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் தாக்கப்பட்டவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மக்களைத் தாக்கிய நபர், பாரீஸ் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்து போலீஸ் தரப்பு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இருந்தபோதும் அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து நமக்கு வந்த செய்தியின்படி, ‘தற்சமயம் இத்தாக்குதல் குறித்து எதுவும் சொல்ல முடியாது. இது தீவிரவாத தாக்குதல் போலவும் தெரியவில்லை. வீதியிலிருந்த பொது மக்களை தாக்கியுள்ளார் அந்த நபர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த யூசப் நஜா என்பவர், ‘நான் வடகிழக்குப் பகுதியில் உள்ள கால்வாய்க்கு அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்போது கத்தியுடன் ஒரு நபர் ஓடி வருவதைப் பார்த்தேன். அவரை சுமார் 20 பேர் துரத்திக் கொண்டு வருவதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவன் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி பின்னால் சென்ற மறையப் பார்த்தான். அப்போது, மர்ம நபரை துரத்தி வந்தவர்கள், ‘அவனிடம் கத்தி உள்ளது. ஜாக்கிரதை’ என்று கூச்சலிட்டனர். அதற்குள் கத்தியால் பிரிட்டன் தம்பதியைத் தாக்கிவிட்டான்’ என்றார் படபடப்புடன்.
பாரீஸில் தொடர்ந்து கத்தியைக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.