கேரளாவில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 27 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மொத்த நிலவரப்படி கேரளாவில் 394 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. அவர்களில் 245 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 147 பேருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது. 2 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து அதிவேகமாக மீண்டெழும் மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டர்களில் 60 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளா. இங்கு கடந்த ஜனவரி மாதம், சீனாவின் வுஹான் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன்பின்னர் மாநில எல்லைகள் மூடப்பட்டதுடன், 28 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பின்னர் மே 3-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அங்கு நிலைமை சற்று சீரடையத் தொடங்கியுள்ளது.
தேசிய அளவில் இன்று புதிதாக 826 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்துள்ளது. இன்று 28 பேர் உள்பட மொத்தம் 420 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.