தமிழகத்தில் மது உற்பத்தி செய்யும் இரண்டு ஆலைகளில் வருமான வரித் துறை அதிரடி சோதனை செய்துள்ளது. இந்த சோதனையில் இரு நிறுவனங்களிடமும் சுமார் 700 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்த சோதனை நடந்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் சுமார் 55 இடங்களில் இந்த சோதனையானது ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, கேரளா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
“கடந்த ஆகஸ்ட் 6, 2019 அன்று வருமான வரித் துறை தமிழகத்தைச் சேர்ந்த மதுபான உற்பத்தி ஆலை நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது. நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள், சப்ளையர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.” என்று ஐடி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக வருமான வரித் துறைக்கு, வரி எய்ப்புத் தொடர்பாக வந்த தொடர் புகார்களை அடுத்து இந்த சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மதுபானத்தை அடைத்துக் கொடுப்பதற்கான பாட்டில் வாங்குவதில், முறைகேடு நடந்திருப்பது இந்த சோதனையின் மூலம் ஐடி துறைக்குத் தெரியவந்துள்ளது.
மதுபான பாட்டில்களை வாங்க, மது ஆலை நிறுவனம், சப்ளையர்களுக்கு செக் மூலம் பணம் செலுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து சப்ளையர்கள் கூடுதலாக கொடுக்கப்பட்ட பணத்தை, நிறுவனத்திடமே திரும்ப கொடுத்துள்ளனர். இது குறித்தான ஆதரங்கள், இந்த சோதனையின்போது சிக்கியதாக தெரிகிறது. இப்படி முறைகேடு செய்யப்பட்ட தொகையானது சுமார் 400 கோடி ரூபாயைத் தொடும் எனத் கூறப்பட்டுள்ளது.
இதைப் போன்ற ஒரு அதிரடி ரெய்டு, இன்னொரு மது உற்பத்தி ஆலை நிறுவனத்திலும் நடத்தப்பட்டது. அந்த ரெய்டில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு வரி எய்ப்பு நடந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவரை 700 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் குறித்தான தகவல்கள் சிக்கியுள்ளதாம்.