நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் போலீசாரை தாக்கியதாக குறைந்தது 93 இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் கணேஷ் நகர் மற்றும் திருப்பதி நகர் பகுதிகளில் உள்ள சுமார் 500 இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேற்றிரவு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி சாலைகளில் குவிந்துள்ளனர். இதனால், நிலைமை பதற்றமடைந்தது என்கிறார் காவல்துறை துணை ஆணையர் விதி சவுதாரி.
உத்தர பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சூரத்தின் பாண்டேசரா பகுதியில் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு மின்சார உற்பத்தி மற்றும் ஜவுளி உற்பத்தி போன்ற பல்வேறு பிரிவுகளில் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களை போலீசார் வீட்டிலே இருக்கும் படி சமாதானப்படுத்திய நிலையில், அதனை ஏற்காமல் பாதுகாப்புப்ப படையினர் மீது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன.
இதைத்தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க காவல் துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்றிரவே ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இன்று காலையும் சிலர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
மேலும், சுமார் 500 பேர் கொண்ட கும்பலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளோம், அவர்களில் 93 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது கலவரம் ஏற்படுத்தியது, காவல் துறையைத் தாக்கியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.