தமிழக அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ-வினர் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ஹைலைட்ஸ்
- 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
- இன்று 1000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
- இன்றைக்குள் பணிக்குத் திரும்ப ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது
தமிழக அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ-வினர் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் ஆசிரியர்களின் வருகை 99.9 சதவிகிதம் என்று தகவல் தெரிவித்துள்ளார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி.
அவர் இன்று எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘சென்னையைப் பொறுத்தவரை 4 ஆசிரியர்கள் மட்டும்தான் இன்று பணிக்கு வரவில்லை. ஒருவர் நேற்று போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றப்படி மீதம் இருக்கும் அனைவரும் பணிக்குத் திரும்பியுள்ளனர். 99.9 சதவிகித ஆசிரியர்கள் இன்று காலை பணிக்கு வந்துள்ளனர்.
தற்காலிக ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்குத் தகுதி இருக்க வேண்டும். பள்ளிக்கு அருகாமையில் அவர்கள் இருக்க வேண்டும். இந்த இரண்டை வைத்துத்தான் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
கடந்த ஒரு வார காலமாகவே போராட்டம் நடந்து வந்தாலும், பள்ளிகளை நடத்தும் அளவுக்கு சென்னையில் ஆசிரியர்கள் வந்து கொண்டுதான் இருந்தனர். இதனால் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்வியில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. நாளை தேர்வு நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து விரைவில் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்' என்று கூறினார்.