ராமேஸ்வரத்தையும் ராமநாதபுர மாவட்டத்தையும் இணைக்கும் பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து உள்ளூர் காவல் துறையினர் பாலத்தில் சோதனை செய்துள்ளனர்.
சென்னையில் இருக்கும் காவல் நிலையத்துக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராமேஸ்வரத்துக்குச் செல்லும் ரயில் மற்றும் சாலை மார்க்க பாலங்களை வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய்களை வைத்து சோதனை செய்துள்ளது போலீஸ்.
இந்த சோதனை நடத்தப்பட்ட போது, பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
சமீபத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசுவாமி கோயிலுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 253 பேர் உயிரிழந்துள்ளனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடற்படை போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.