This Article is From Aug 08, 2018

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்த தமிழக அரசு… அவசர வழக்கு!

கடற்கரையில் சமாதி அமைப்பது பற்றி சில வழக்குகள் இருப்பதால், சட்ட சிக்கலை காரணம் காட்டி, அரசு இவ்வாறு அறிவித்துள்ளது

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய மறுத்த தமிழக அரசு… அவசர வழக்கு!

தி.மு.க தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உயிருக்கு போராடி வந்தவரின் இறுதி மூச்சு இன்று நின்றது. இந்நிலையில் அவரது உடலை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய திமுக-வின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக ஒரு அவசர வழக்கை திமுக, தொடுத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு முன்னர் அறிவித்தது. முன்னதாக ஸ்டாலின் மற்றும் தி.மு.க சார்பில், அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி வேண்டி முதலமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், அப்போது “பார்ப்போம்” என்று மட்டும் முதலமைச்சர் பதில் அளித்ததாக துரை முருகன் கூறியிருந்தார்.

கடற்கரையில் சமாதி அமைப்பது பற்றி சில வழக்குகள் இருப்பதால், சட்ட சிக்கலை காரணம் காட்டி, அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, திமுக சார்பில் கருணாநிதியை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டி அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை இன்று இரவு 10:30 மணிக்கு தற்காலிக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் விசாரிப்பதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

.