This Article is From Dec 20, 2018

1984 சீக்கிய கலவர வழக்கு: சஜ்ஜன் குமாருக்கு எதிராக இன்று விசாரணை!

கலவரத்தில் 2,800 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்

1984 சீக்கிய கலவர வழக்கு: சஜ்ஜன் குமாருக்கு எதிராக இன்று விசாரணை!
New Delhi:

கடந்த 1984 ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தைத் தூண்டிவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி சஜ்ஜன் குமார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இன்று டெல்லி நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

சீக்கிய கலவரம் குறித்தான இன்னொரு வழக்கில், கடந்த 17 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம், சஜ்ஜன் குமாரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அதே விஷயம் தொடர்பான வேறொரு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில், டெல்லியின் சுல்தான்புரியில் சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேத் பிரகாஷ் ஆகியோர், சுர்ஜித் சிங் என்கின்ற சீக்கியரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஆஜரான சாட்சியான சம் கவுர், சஜ்ஜன் குமாருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடக்கும் என்று தெரிகிறது.

17 ஆம் தேதி சஜ்ஜன் குமாருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய டெல்லி நீதிமன்றம், 'கலவர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் அதிகாரத்தில் திளைத்து வந்தனர். ஆனால், அச்சுறுத்தல் எதற்கும் அஞ்சாமல் வழக்கை தீர்க்கமாக முன்னெடுத்துச் சென்ற ஜகதீஷ் கவுரை நாங்கள் பாராட்டுகிறோம். சஜ்ஜன் குமார், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் சரணடைய வேண்டும். கலவரத்தின் போது நடந்த சம்பவங்கள் பல மட்டங்களில் இன்னும் பிரதிபலிக்கின்றன' என்றது.

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை, அவரது சீக்கிய பாதுகாவலர்கள், 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இதையடுத்து சீக்கியர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் 2,800 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

.