டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு, தோட்டாக்களுடன் ஒரு நபர் வந்துள்ளார். முதல்வர் வீட்டில் பாதுகாப்புக்காக இருந்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தன்னை க்ளார்க் என்று சொல்லிக் கொண்ட இம்ரான் என்ற அந்த நபர், நேற்று முதல்வரைப் பார்க்க அவரது இல்லத்துக்கு வந்துள்ளார். தனக்கு கொடுக்கப்படும் சம்பளம் போதவில்லை என்றும், முதல்வரிடம் சம்பள உயர்வு குறித்து பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து முதல்வர் வீட்டிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், இம்ரானை சோதனையிட்டுள்ளனர். அப்போது, அவரிடம் தோட்டாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
தோட்டாக்கள் குறித்து இம்ரான், அருகிலிருக்கும் மசூதியில் தோட்டாக்களை கண்டடைந்தாகவும், தன்னிடம் அது இருப்பதை மறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது அலுவலகத்துக்கு வெளியிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. இதனால் முதல்வரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.
மிளகாய் பொடி வீச்சு குறித்து கெஜ்ரிவால், ‘டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மக்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளது. இதையெல்லாம் பொறுக்க முடியாத பாஜக தான், மிளகாய் பொடி வீசி என் மீது தாக்குதல் நடத்தியுள்ளது' என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும் அவர், ‘டெல்லியின் முதல்வருக்குக் கூட பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்' என்றார்.