விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர், தனது குழந்தையை மறந்து போய் விமான நிலையத்தின் காத்திருப்பு இடத்திலையே விட்டுள்ளார். அதனால், விமானம் திரும்பி விமான நிலையத்திற்கே வந்துள்ளது.
சவுதியைச் சேர்ந்த SV832 என்னும் விமானத்தில்தான் இப்படி ஒரு அதிர்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. குழந்தையை மறந்துவிட்டதாக அந்த தாயார் கூறியதால், அந்த விமானத்தின் விமானி, ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் ஆஷிச் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பியுள்ளார்.
‘இந்த விமானம் திரும்பி இறங்க அனுமதி கேட்கிறது. விமானத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையை மறந்ததால், அவரசமாக விமானத்தை இறக்குகிறோம்', என விமானி விமான நிலைய அதிகாரிகளிடம் கூறுவது வைரல் ஆகியுள்ளது.
அந்த விமானம் ஜெட்டாவில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானம் ஆகும். ஒரு விமானத்தை மறுபடியும் இறக்க, அவசரச் சட்டங்கள் சில உள்ளன.
ஆனால், இப்படியொரு சம்பவத்துக்கு விமானத்தை அவசரமாக இறக்க அனுமதி வழங்கியது இதுவே முதல் முறையாகும். மேலும் இதனை அவசரக் கோட்பாடாக கருத முடியுமா என விமான அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.