‘குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு' என்னும் புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ் கஜேந்திர பாபு, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஆ.ராசா, “ஆரியம் என்பது பல காலங்களாக பலரை உருவாக்கிய வண்ணம் இருக்கிறது. அன்று ராஜாஜி, குலக்கல்வித் திட்டம் மூலம் ஆரிய, வர்ணாசிரம கோட்பாட்டை முன்னெடுத்தார். பாலகங்காதர திலகர், சுயராஜ்ஜியம் எங்களது பிறப்புரிமை என்று பேசியவர். அவரும் பிளேக் நோய் வந்தபோது, ‘எலி பிள்ளையாரின் வாகனம் அதை கொல்லக் கூடாது' என்று வர்ணாசிரம மூட நம்பிக்கையை முன்மொழிந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட, உடல் நலிவுற்று இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர் மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்கினார். பகவத் கீதையைப் படியுங்கள். நாடு சுபிட்சமாக இருக்கும் என்று ஆரியத்திற்கு வழிகோலிட்டார். இன்றும் ஆடிட்டர் குருமூர்த்தி சொல்கிறார், விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இருந்துவிடலாம். ஆனால், வேதம் இல்லாமல் ஒரு நாடு இருக்க முடியாது என்கிறார். ஆனால் திருவள்ளுவரோ, சாப்பிட உணவில்லை என்றால் கடவுளையே போசுக்கு என்று நமக்கு போதித்தவர்.
இவர்களெல்லாம் ஒரு ரகம் என்றால், இன்று தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒரு ரகம். அவரும் ஆரியத்தின் அடிவருடிதான். ஆனால், அவரைப் புரிந்து கொள்ளவே முடியாது. காரணம், அவருக்கே அது புரியாது,” என்றார்.
முன்னதாக பேசிய சத்யராஜ், “பெரியார் இயக்கமும் பெரியாரும் என்ன செய்தார்கள் என்று தொடர்ந்து கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு சான்றாக இருக்கும். நான் ஒரு நடிகன் என்பதில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி கிடையாது. பெரியாருடைய தொண்டன் என்று சொல்லிக் கொள்வதில்தான் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் இருக்கிறது. நான் என்றும் பெரியார் தொண்டனாகவே இருப்பேன்.
பெரியாரின் கோட்பாடுகளும், அவரின் தொண்டர்களும் இன்றளவும் வீரியமாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான் பெரியாரின் பெரயைக் கேட்டாலே பலர் அலறுகிறார்கள்,” என்று நகைச்சுவை கலந்து பேசினார்.