சிலமாத ஓய்வுக்குப் பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளார். விமானப்படையின் தலைமை தளபதி பி.எஸ். தனோவாவும், அபிந்தனும் இன்று சக்திமிக்க மிக் 21 போர் விமானத்தில் பறந்து சென்றனர். இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக கார்கில் போர் கடந்த 1999-ல் நடைபெற்றபோது, தலைமை தளபதி பி.எஸ். தனோவா, போர் விமானத்தில் பறந்து தாக்குதல் நடத்தியிருந்தார். அவரும், அபிநந்தனின் அப்பாவும் ஒன்றாக பணியாற்றிவர்கள். அபிநந்தனின் அப்பா விமானப்படை உயர் அதிகாரியாக இருந்தார்.
இந்தப் பயணம் குறித்து விமானப்படை தலைமை தளபதி கூறுகையில், ‘எனக்கும் அபிநந்தனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சண்டையின்போது போர்விமானத்தில் இருந்து தப்பி வெளியே வந்தவர்கள். நான் கார்கில் போரில் சண்டையிட்டேன். அபிநந்தன் பாலகோட்டில் தாக்குதல் நடத்தினார். நானும், அபிநந்தனின் அப்பாவும் ஒன்றாக போர் விமானத்தில் பறந்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, பாகிஸ்தான் நாட்டு எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் 36 வயதாகும் அபிநந்தன். அவரது விமானமும் விபத்துக்கு உள்ளான நிலையில், பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி அவர் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் தேசிய அளவில் மிகவும் புகழ் பெற்றார்.
ஜம்மூ காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேரை, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலைப் படைத் தாக்குதலால் கொன்றது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம், இந்திய விமானப் படை, பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் செயல்பட்டு வய்ந ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை குண்டு போட்டு அழித்தது. இதைத் தொடர்ந்துதான் இரு நாட்டுக்கும் இடையில் வான் வழிச் சண்டை நட்நதது. அதில்தான் அபிநந்தன் சிக்கினார்.
விமானம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து பாராசூட் மூலம் தப்பித்தார் அபிநந்தன். பாகிஸ்தானுக்கு உட்பட்ட இடத்தில் லேண்ட் ஆன அபிநந்தனுக்கு சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டது. அவர் பிடிபட்டதில் இருந்து தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு, தீவிர உடல் சோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதற்குக் காரணம், பாகிஸ்தானின் உள்ளூர்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்டதே என்று அந்நாட்டு அரசு விளக்கம் கொடுத்தது. ஜெனீவா ஒப்பந்தத்தின் விதிமுறைகள்படியே அவர் கண்ணியமாக நடத்தப்பட்டார் என்றும் பாகிஸ்தான் விவரித்தது.
விங் கமாண்டர் அபிநந்தனும் (IAF Pilot Abhinandan), “பாகிஸ்தான் தரப்பு என்னை உடல் ரீதியாக துன்புறத்தவில்லை. அதே நேரத்தில் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்” என்று தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம், அபிநந்தன், இந்திய மேற்கு எல்லையில் இருக்கும் தளத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். அதுவும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.