மத்தியபிரதேசம் : காவல் நிலையத்தில் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஒருவர் மண்வெட்டியால் 2 காவலர்களை பலமாக தாக்கி விட்டு தனது கூட்டாளியுடன் தப்பிச்சென்றார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் ஞாயிறன்று நடந்துள்ளது. குற்றவாளிகள் 2 பேரையும் சிசிடிவி உதவியால் போலீசார் பிடித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் விஷ்ணு ராவத் மற்றும் அவரது நண்பர் மன்சிங் ஆகியோர் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரணைக்காக இருவரையும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.
அவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு ஹெட் கான்ஸ்டபிள் உள்பட 2 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த மண்வெட்டியால் விஷ்ணு ராவத் போலீசார் இருவரையும் பலமாகத் தாக்கினார். இதில் இருவரும் மயக்கமடைந்தனர். இதையடுத்து, கூட்டாளியுடன் விஷ்ணு தப்பிச் சென்று விட்டார். அடுத்த சில மணி நேரங்களில் சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் இருவரையும் பிடித்தனர்.
காயமடைந்த ஹெட் கான்ஸ்டபிள் உமேஷ் பாபுவின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளது. போலீசாரை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து காவலர்களேயே தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.