நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன் என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், திரைத்துறையில் மிகவும் நேர்மையான நடிகர் அஜித். அவர் பலருக்கு நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். இனி மோடியின் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழிசையின் இந்த கருத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில், நடிகர் அஜித்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயமும் வந்து விடக்கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது. என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொதுமக்கள் இடையே விதைக்கும்.
இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்ப்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன்.
அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை தான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எத்த ஒரு அரசியல் திகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.
எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோன் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம், மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும்,வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதைசெலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு.
“வாழு வாழ விடு” என்று அஜித் வெளியிட்டுள்ள கூறியுள்ளார்.
மேலும் படிக்க: ''ஒற்றுமையாக இருங்க; உடல் நலனில் கவனம் செலுத்துங்க'' - ரசிகர்களிடம் உருகிய அஜித்