This Article is From Aug 12, 2020

“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச்

அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார்.

“கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு..?”- அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை; அமைச்சர் உதயகுமாரின் பன்ச்

ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு, களத்தை சந்திப்போம்" எனக் கூறியுள்ளார்

ஹைலைட்ஸ்

  • செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் பற்றி சூசக கருத்து கூறியிருந்தார்
  • ராஜேந்திர பாலாஜி அதை எதிர்க்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்
  • ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜியின் கருத்தை ஆதரித்துள்ளார்

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சூசகமாக பேசியிருந்தார். தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

இரு தினங்களுக்கு முன்னர் செல்லூர் ராஜூ, “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, தானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. மக்கள் சொன்னார்கள்.

அதேபோலத்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதாதான் முதல்வராக வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினார்கள். இதுதான் அதிமுகவின் வரலாறு.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, யார் முதல்வர் வேட்பாளர் என்று சொல்கிறாரோ அவர்தான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்” என்று சூசகமான பதிலை தெரிவித்துள்ளார். 

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே, முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு, களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம். களம் கான்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே!” என்று ட்விட்டர் மூலம் கூறினார். 

ராஜேந்திர பாலாஜியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்கெனவே 3 தேர்தல்களை அதிமுக சந்தித்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், அதனுடன் நடைபெற்ற மினி சட்டமன்றத் தேர்தல் ஆகியவை எடப்பாடியார் தலைமையில்தான் அதிமுக சந்தித்தது. அந்தத் தேர்தல்களில் அதிமுகவுக்குச் சாதகமாக வாக்களித்து, மக்கள் யார் தலைமையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதைக் காட்டியுள்ளார்கள். எனவே வருகின்ற தேர்தலிலும் எடப்பாடியார் தலைமையில்தான் அதிமுக தேர்தலை சந்திக்கும். கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

.