சில மாதங்களுக்கு முன்னர், ப்ளூவேல் என்ற வீடியோ கேம் இணையத்தில் எதிர்மறை காரணங்களுக்காக மிகவும் வைரலானது. உலகத்தின் பல்வேறு இடங்களில் பலர் தற்கொலை செய்து கொள்ள இந்த வீடியோ கேம் காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது, இன்னொரு விஷயம் நெட்டிசன்களை சலசலப்படைய வைத்துள்ளது.
மோமோ சேலஞ்ச் எனப்படும் ஒரு விஷயம் தான் தற்போது ப்ளூவேல் போல பலரை அச்சுறுத்தி வருகிறது. அர்ஜென்டினாவில் இருக்கும் ஒரு 12 வயதுச் சிறுமி இறந்ததற்கு மோமோ சேலஞ்ச் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் மோமோ என்ற கணக்கு இருக்குமாம். அந்த கணக்கு மூலம் பயனர்களுக்கு மோமோ, தெரியாத பல எண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள சொல்லுமாம். பின்னர் மோமோ, பல உத்தரவுகளை பிறப்பிக்குமாம். அப்போது பயனர்கள் மோமோ-வுக்கு அடிபணிய மறுத்தால், மிகவும் அச்சப்படும் வகையிலான புகைப்படங்கள் அனுப்பப்படுமாம்.
இது குறித்து ட்விட்டரில் பலர் தங்களது பயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மோமோ கேம், மெக்சிக்கோ, ஜப்பான் மற்றும் கொலம்பியாவிலிருந்து செயல்பட்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.