கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மூ காஷ்மீர் (Jammu and Kashmir) மாநிலத்தில் பறந்த நாட்டுக்குச் சொந்தமான Mi-17 V5 ஹெலிகாப்ட்டரை, தவறுதலாக சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப் படை (Indian Air Force). தற்போது அது குறித்துப் பேசியுள்ள இந்திய விமானப் படையின் தளபதி ராகேஷ் குமார் (IAF Chief Rakesh Kumar Singh Bhadauria), “அப்போது செய்தது மிகப் பெரிய தவறு” என்று ஒப்புக் கொண்டுள்ளார். அந்த தாக்குதலால் 6 விமானப் படை வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர்.
“அன்று நடந்தது மிகப் பெரிய தவறு. அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அது குறித்தான விசாரணை சென்ற வாரம் முடிவடைந்துள்ளது. நாங்கள் செலுத்திய ஏவுகணை, ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துறை ரீதியிலான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 அதிகாரிகள் மீது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள், பாகிஸ்தான் எல்லையில் இருந்த பாலகோட் தீவிரவாத முகாமில் குண்டு போட்டுத் தாக்கியது. அதற்கு அடுத்த நாள்தான், ஜம்மூ காஷ்மீரின் புட்காம் பகுதியில் பறந்து கொண்டிருந்த, Mi-17 V5 ரக ஹெலிகாப்ட்டரை இந்திய விமானப்படை, தவறுதலாக சுட்டு வீழ்த்தியது.
பதற்றமான சூழலில் ஹெலிகாப்ட்டர் வந்ததைத் தொடர்ந்து, அதை ஏவுகணை என்று தவறுதலாக புரிந்து கொண்ட விமானப் படை அதிகாரிகள், அதை நோக்கி ஏவுகணையைச் செலுத்தினார்கள். அது ஹெலிகாப்ட்டரைத் தாக்கியது. இதனால், வானில் தீப்பிடித்த ஹெலிகாப்ட்டர் கீழே விழுந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் புல்வாமாவில், துணை ராணுவப் படை மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினார்கள். அதில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாகத்தான் பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது.