நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14.35 லட்சமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் திரைக்கலைஞரான ஐஸ்வர்யாராய் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
முதலில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடையே நடைபெற்ற பரிசோதனையில் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய், மற்றும் அவர்களின் குழந்தை ஆராதயா ஆகியோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 10 நாட்களாக மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்ய மற்றும் அவரது 8 வயது மகள் ஆராதயா ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அபிஷேக் பச்சன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால், தானும் தன்னுடைய தந்தையான அமிதாப் பச்சனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றோம் என்றும், தங்களுக்காக பிரார்த்தனை செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என்றும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் புகைப்படத்தினை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. இவர் கடந்த 17-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.