தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்தான் நீடிப்பார் என்று மத்தயி அரசு தெரிவித்துள்ளது.
அஜித் தோவலின் அர்ப்பணிப்பு உணர்வு, நாட்டிற்கான அவரது பங்களிப்பு உள்ளிட்டவற்றை பாராட்டி இந்த பணி நீட்டிப்ப செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டது. அமைச்சரவையில் கட்சியின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா இணைத்துக் கொள்ளப்பட்டார். அவருக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அவர் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. பாதுகாப்புத்துறை ராஜ்நாத்துக்கும், நிதித்துறை நிர்மலா சீதாராமனுக்கும், வெளியுறவு அமைச்சர் பொறுப்பு ஜெய்சங்கருக்கும் அளிக்கப்பட்டது.
முந்தைய மோடி அரசில் அதிகாரம் மிக்கவராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலம் வந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. இந்த நிலையில் அஜித் தோவலை மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரியான அஜித் தோவல் உளவுத்துறை தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார். பாலகோட் விமானத் தாக்குதல், புல்வாமா தீவிரவாத தாக்குதல், 2016-ல் நடந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் உள்ளிட்டவை அஜித் தோவலின் மேற்பார்வையில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.