2 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். கடந்த 2016 நவம்பர் 8-ம்தேதி ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார்.
மேலும், அடுத்த 50 நாட்களுக்குள் நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும் என்றும் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியுள்ளனர். மோடியின் நடவடிக்கையை உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அகிலேஷ் யாதவ் கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அடுத்த 50 நாட்களில் வேலைவாய்ப்பு, ஏழ்மை போன்றவை நீங்கி விடும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்கள் இன்னும் தங்களது வேலைக்காக காத்திருக்கின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன லாபம் மக்களுக்கு கிடைத்துள்ளது? என்று கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், அன்றைக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக மக்களிடம் பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.