சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலகாபாத்தின் பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழக விழாவுக்குச் செல்ல இருந்த அகிலேஷ் யாதவ் லக்னோ விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, அலகாபாத் பல்கலைக்கழகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றால், இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்படும். பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனால், சட்டம் ஒழுங்கைக் காக்கவே அரசு முயற்சி எடுத்தது. அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகமே அகிலேஷ் வருகையை எதிர்க்கிறது" என்று அவர் கூறினார்.
இதையடுத்து, ஒரு சில மணி நேரங்களில், லக்னோ தலைநகரம், பிரயாக்ராஜ், ஜான்ப்பூர், ஜான்சி, கானுஜ், பால்ராம்ப்பூர், கோராக்பூர் உள்ளட்ட பல்வேறு பகுதிகளிலும் அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கியது.
சமாஜ்வாதி தொண்டர்கள் போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்த துவங்கினர். பிரயாக்ராஜ் பகுதியில் போலீசாரின் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மேந்திர யாதவ் காயமடைந்தார்.
கோராக்பூரில் யோகி ஆதித்யநாத் இல்லம் உள்ள இடத்தில் போராட்டக்காரர்களால் சாலைகள் முடக்கப்பட்டன. இதேபோல், லக்னோவில் போராட்டக்காரர்கள் சட்டசபை வளாகம் முன்பும் ஆளுநர் இல்லம் முன்பும் கூடினர்.
முன்னதாக அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், இதுதொடர்பான புகைப்படத்தையும், போலீஸாருடன் தாங்கள் பேசுவது தொடர்பான காட்சியையும் வெளியிட்டிருந்தார். அதில், விமானத்தின் வழிப்பாதையில் நின்று கொண்டு போலீசார் அகிலேஷ் யாதவை தடுப்பது போலவும் புகைப்படம் உள்ளது.
மற்றொரு புகைப்படத்தில் அகிலேஷ் யாதவ் காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் உள்ளது. இதுதொடர்பான அகிலேஷ் யாதவின் குழு வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில், விமானத்தில் ஏற முயலும் அகிலேஷை காவலர்கள் தடுத்து நிறுத்துகிறன்றனர். அப்போது, அகிலேஷ் காவலர்களை நோக்கி தன் மீது கைவைக்காதீர்கள் என்றும் கூறுவதுபோல் உள்ளது.
மேலும், இதுகுறித்து அகிலேஷ் கூறியதாவது, அலகாபாத்தின் பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புத் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்றுவிடுவேன் என அச்சப்பட்டு என்னை விமான நிலையத்தில் பாஜக அரசு தடுத்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார்.