This Article is From May 22, 2018

நிபா வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, நிபா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Nipah virus (NiV) is spread by fruit bats that infects both animals and humans.

ஹைலைட்ஸ்

  • இதுவரை 3 பேர் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது
  • ஏற்கெனவே மத்திய அரசின் ஒரு குழு பாதிக்கப்பட்ட இடத்துக்கு வந்துவிட்டது.
  • கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு கேரள அரசு ரூ.20 லட்சம் கொடுத்துள்ளது.
Kozhikode: கேரளாவில் இதுவரை 3 பேர் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, நிபா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் பேசுகையில், `கோழிக்கோடுப் பகுதியைச் சுற்றி இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் நிபா வைரஸை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன. எனவே, கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு மட்டுமே நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும் மக்கள் செல்லலாம். இதுவரை 8 பேருக்கு நிபா வைரஸ் இருப்பதாக அஞ்சப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். அவர்களிடமிருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. ரத்த மாதிரியை சோதனைக்காக புனேவுக்கு அனுப்பியுள்ளோம். மாதிரிக்கான முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்றார் ஷைலஜா.

நிபா வைரஸ், பழந்தின்னி வௌவ்வால்களால் பரவுகின்றன. இந்த வைரஸ் மனிதர்கள் மற்றும் மிருகங்களை பாதிக்கக் கூடும். கேரளாவில் முதன்முறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களையும் அவர்களின் உறவினர் ஒருவரையும் சில வாரங்களுக்கு முன்னர் தாக்கி உயிரைப் பறித்தது நிபா வைரஸ். இந்நிலையில், தற்போது 8 பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். நிபா வைரஸ், பாதிக்கப்பட்ட வௌவ்வால்கள் மூலமும், பன்றிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்தும் பரவும்.

`சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்த சபித் மற்றும் அவரின் சகோதரர் வசித்து வந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு நடத்தினர். அந்த வீட்டில் இருந்த கிணறு பல நாட்களாக பராமறிக்கப்படாமலும் வௌவ்வால்கள் அதிகம் இருப்பதும் தெரிய வந்தது. அதை அதிகாரிகள் மூடி, சீல் வைத்துள்ளனர். எனவே, அந்தக் கிணற்றில் இருந்து மேலும் வௌவ்வால்கள் வராமல் இருக்கும்’ என்று கூறியுள்ளார் ஷைலஜா.

மேலும் அவர், மரத்திலிருந்து கீழே விழும் பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

`நிபா வைரஸ் குறித்தான விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். மேலும், மத்திய அரசின் சார்பிலும் பல மருத்துவக் குழுக்கள் நிபா வைரஸ் தாக்கத்தைத் தடுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது’ என்றவர்,

`ஏற்கெனவே மத்திய அரசின் ஒரு குழு பாதிக்கப்பட்ட இடத்துக்கு வந்துவிட்டது. மேலும் ஒரு குழு நாளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று விளக்கினார். கோழிக்கோடு பகுதியிலேயே இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, அங்கு உள்ள கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு கேரள அரசு 20 லட்ச ரூபாயை அவசர நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.
 
.