Read in English
This Article is From Sep 06, 2019

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம் தரப்புக்கு சாதகமாக நீதிபதி உத்தரவு- விழிபிதுங்கும் அரசு!

Aircel-Maxis case: வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது நீதிமன்றம். 

Advertisement
இந்தியா

“அவர்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அவ்வளவு பெரியதல்ல”

New Delhi:

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வழக்கை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது. வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது நீதிமன்றம். 

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அமைப்புகள், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அவர்களுக்குப் பிணை வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, “அவர்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அவ்வளவு பெரியதல்ல” என்று தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், “இந்த வழக்கில் குற்றம் புரிந்ததாக சொல்லப்பட்டிருக்கும் நேரத்திற்கும், விசாரணையில் தொடர்ந்து வரும் சுணக்கத்துக்கும் இருக்கும் விவகாரங்களைப் பார்த்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் கொடுக்கலாம் என்று தெரிகிறது. 

Advertisement

சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவ்வளவு பெரிய அளவில் இல்லை. சிதம்பரம் தரப்பு, சுமார் 1.13 கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தயாநிதி மாறன் மற்றும் சிலர், 749 கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அவர்கள் கைதுக்கு உள்ளாக்கப்படவில்லை.

ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு ஒரு மாதிரியான விசாரணையும், இன்னொருவருக்கும் வேறு மாதிரியான விசாரணையும் செய்யப்படக் கூடாது. அது சட்ட சாசனத்துக்கு எதிரானது. வழக்கில் ஆவணங்களை சமர்பிப்பதற்கு பதில் விசாரணை அமைப்புகள், தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கின்றன” என்று காரசாரமாக கருத்து தெரிவித்தார். 

Advertisement

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Advertisement

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு இறுக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.

Advertisement