ராஜஸ்தானில் பசுப் பாதுகாவலர்களால் பெஹ்லுகான் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார் என தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் விடுதலையளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்கள் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வாங்கி மாடுகளை பெஹ்லுகான் என்பவர் தனது சொந்த மாநிலமான அரியானாவுக்கு கடந்த 2017 ஏப்ரல் 1-ம்தேதி கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெய்ப்பூர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அவரை வழி மறித்த பசு பாதுகாவலர்கள், பெஹ்லுகானை கடுமையாக தாக்கினர்.
இதுதொடர்பான வழக்கு ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அவர்களை தவிர்த்து மேலும் 3 சிறுவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பெஹ்லுகான் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் விடுதலையாகியிருப்பது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பி உள்ளது.