ராஜஸ்தானில் காங்கிரஸூக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, காங்கிரஸ் தனது எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பலப்படுத்தும் முயற்சியில், இருந்து வருகிறது. இதனிடையே, தற்போது காங்கிரஸூக்கு மேலும் தலைவலியாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அமைந்துள்ளது.
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் இணைந்தனர், இதைத்தொடர்ந்து, மாநில ஆளும் கட்சியின் எண்ணிக்கை 106 ஆக இருந்தது. இதனிடையே, அந்த எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்க பகுஜன் சமாஜ் கட்சி நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடும், என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர்களாக வாக்களிப்பதை தடுக்க, ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்களது கட்சியை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு சென்றிருந்தது.
இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், "இந்த ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக வாக்களிக்க அனுமதிக்கப்படாமல், அதற்கு பதிலாக அவர்களை பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களாக கருதி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டவர்கள் என்று தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
எனினும், இந்த விவகாரத்தில் தேர்தல் அமைப்பு தலையிட மறுத்துவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டமன்ற கட்சி பிரிவை காங்கிரசுடன் இணைத்துள்ளதாகவும் அது அறிவிக்கப்பட்டதாகவும் ராஜஸ்தான் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு தனது பலத்தை அதிகரிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி இதேபோன்ற கோரிக்கையுடன் நீதிமன்றத்திற்கு செல்லக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு எம்.எல்.ஏ.க்களின் நிலையை தீர்மானிக்கும் முன் சட்டமன்ற சபாநாயகர் அதைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கட்சி நம்புகிறது.