பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் மக்களை கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதற்கு பின் தியாக ராஜா குமாரராஜன் இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவருக்கு பாலிவுட் நட்சத்திரமான நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் தமிழ்வாணன் இயக்கவுள்ளார். "உயர்ந்த மனிதன்” என்று தலைப்பிட பட்ட இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவும் நடித்து கொண்டிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் “படே மியான் சோட்டே மியான்” என்னும் பாலிவுட் படத்தில் அமிதாப் பச்சனும், ரம்யா கிருஷ்ணனும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் காமெடி படமான இந்த படத்திற்கு பிறகு தற்போதுதான் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். அமிதாப் பச்சன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவருமே நடிப்பில் சிறந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒரே திரையில் தோன்றினால் நிச்சயம் பட்டாசு தான்.
இதனை தொடர்ந்து, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நடிகர் அமிதாப் பச்சனை புகைப்படம் எடுத்து அதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். மேலும் அவர் பதிவிட்டதாவது, “என் வாழ்வில் மிகவும் மறக்க முடியாத நிகழ்வு இது. இதற்கு நான் நிச்சயம் என் தாய், தந்தை மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு என் நன்றிகளை செலுத்தியே ஆக வேண்டும். முதன் முதலாக திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்த போது, நடிகர் அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்று பல கனவுகள் இருந்தது. ஆனால் தற்போது அவை நனவாகும் போது, மகிழ்ச்சியில் திக்குமுக்காடி நிற்கிறேன். அவருடன் நான் நடிக்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கான தேதிகளை கடந்த வருடமே நடிகர் அமிதாப் பச்சன் ஒதுக்கிவிட்டதாகவும், அடுத்த வருடத்திற்கான தனது திட்டங்களையும் தன்னுடன் பகிர்ந்ததாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா வியப்புடன் கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)