விளம்பர படம் ஒன்றில் வழக்கறிஞர் போன்று உடை அணிந்து நடித்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மசாலா தயாரிப்பு நிறுவனம், யூடியூப் மற்றும் விளம்பர தயாரிப்பு நிறுவனம் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எந்த வித அனுமதியும் பெறாமல் இதுபோன்ற விளம்பரங்களை ஒளிபரப்பியதற்காக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமென்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இதுபோன்ற விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்காலத்திலும் இந்த மாதிரியான விளம்பரங்கள் எடுக்கப்படக் கூடாது என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கறிஞர்கள் சங்கம் சம்பந்தப்பட்டவர்களிடம் பத்து நாட்களுக்குள் உரிய பதிலை அளிக்கும் படி கேட்டுக் கொண்டனர். அதற்கு அவ்விளம்பரம் தொடர்பான யாரும் பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அமிதாப் பச்சன் இது போன்ற பிரச்சனையை நகை கடை விளம்பரத்திலும் சந்தித்தார். அமிதாப் மற்றும் அவரது மகள் ஸ்வேதா பச்சன் இணைந்து நடித்த விளம்பரத்தில் வங்கி ஊழியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று அறிவித்ததும், அந்த விளம்பர படம் நிறுத்தி வைக்கப்பட்டது.