நேற்று இரவு பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது மகன் அபிஷேக் பச்சன் தற்போது தானும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.
“லேசான அறிகுறிகளை கொண்ட எங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு எற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். எனவே இந்த விசயம் குறித்து யாரும் பீதியடைய வேண்டிய அவசியமில்லை.” என அபிஷேக் டிவிட் செய்துள்ளார். அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், “அமிதாப் தொற்றுக்கான அறிகுறியற்றும், அவரது உடல் நிலை சீராகவும் உள்ளது.” என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள், “விரைவில் குணமடைந்து வர வேண்டும்.” என டிவிட் செய்துள்ளனர். கடந்த மாதம், அமிதாப் பச்சனின் குலாபோ சிட்டாபோ OTT இயங்குதளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது, இது பச்சனின் முதல் டிஜிட்டல் வெளியீடாக அமைந்தது. ஆயுஷ்மான் குர்ரானா நடித்த இப்படத்தில் நடித்ததற்காக பச்சன் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். அமிதாப் பச்சனின் படங்களின் வரிசையில் இப்போது பிரம்மஸ்திரா, ஜுண்ட் மற்றும் செஹ்ரே ஆகியவை காத்திருப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.