This Article is From Jul 08, 2019

வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது; தினகரன் சொன்ன ‘அடடே’ காரணம்!

"எங்களது கட்சியை சீர்குலைக்க பல தரப்பினரும் தொடர்ந்து முயன்று, காய் நகர்த்தி வருகிறார்கள்."

வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது; தினகரன் சொன்ன ‘அடடே’ காரணம்!

திமுக சார்பில், வேலூர் மக்களவைத் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிடுவார்  என்றும், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாக இருக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த இடைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடாது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன்.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு 5 ஆம் தேதி நடைபெறும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும்.

ஜூலை 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். ஜூலை 18 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.  ஜூலை 19 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பிரிசீலனை நடக்கும். ஜூலை 22 ஆம் தேதியே, வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்தது. அதே நேரத்தில், வேலூரில் இருக்கும் திமுக கட்சிப் பிரமுகர் என்று சொல்லப்படுபவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. நாட்டிலேயே வேலூர் தொகுதியில் மட்டும்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் இடைத் தேர்தலில் நிற்காதது குறித்து பேசியுள்ள தினகரன், “அமமுக-வை, கட்சியாக பதிவு செய்யும் பணி இன்னும் நிறைவடையவில்லை. வேலூர் தொகுதி தேர்தலைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடக்கும். ஒவ்வொரு தேர்தலுக்கும் சுயேட்சியாக நிற்க வேண்டாம் என்று கட்சியின் நிர்வாகிகள் கூறுகிறார்கள். அதையொட்டித்தான் வேலூரில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். 

எங்களது கட்சியை சீர்குலைக்க பல தரப்பினரும் தொடர்ந்து முயன்று, காய் நகர்த்தி வருகிறார்கள். ஆனால், அதை அனைத்தையும் முறியடித்து அமமுக, விஸ்வரூபம் எடுக்கும்” என்று கூறியுள்ளார். 

திமுக சார்பில், வேலூர் மக்களவைத் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிடுவார்  என்றும், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

.