நியூசிலாந்தில், விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக, ஒரு விமானம், நீர்ப்பரப்பில் இறக்கப்பட்டது. இதனால், விமானத்துக்கு உள்ளே இருந்த பயணிகள் நீந்தி உயிர் பிழைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
ஏர் நியூகி நிறுவனத்தின், போயிங் 737-800 விமானம் மைக்ரோநேஷியா என்ற இடத்தில் இருக்கும் வெனோ விமான நிலையத்தில் இறங்க தயாரானது. ஆனால், எதிர்பாராத விதமாக விமான நிலையத்துக்கு அருகிலிருந்த நீர்ப்பரப்பில் தரையிறங்கியது ஃப்லைட்.
விமானம் நீர்ப்பரப்பில் தரையிறங்கிய உடன், அருகிலிருந்த உள்ளூர் மக்கள் சிறிய படகுகள் மூலம் விமானத்தை அடைந்து, அதற்குள் இருந்த 35 பயணிகள் மற்றும் 12 விமானக் குழுவினரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபடத் தொடங்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து விமான நிறுவனம், ‘விமான நிலையத்தில் இருக்கும் ரன்வேயில் தரையிறங்குவதற்கு பதிலாக, ஃப்லைட் நீர்ப்பரப்பில் இறங்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானக் குழு மற்றும் பயணிகளை பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரையிறங்க இருந்த விமான நிலையத்துக்கு அருகாமையில் மிக மோசமான வானிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்த இந்த விமானத்தின் விபத்து குறித்து அந்நாட்டு அரசு, ‘நாங்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு விசாரணை அதிகாரிகளை அனுப்பப் போகிறோம். மற்றப்படி இந்த விவகாரத்தில் எங்களிடம் வேறு எந்தத் தகவலும் இல்லை’ என்று மட்டும் கூறியுள்ளது.
விபத்துக்கு உள்ளான விமானம் 2005 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது எனவும், இதற்கு முன்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் விமானத்தை வைத்திருந்தது எனவும் தெரிய வந்துள்ளது.