ஆந்திர பிரதேச மாநிலத்தின் விஜயவாடாவில், தனது மனைவியின் கழுத்தை அறுத்து, துண்டிக்கப்பட்ட தலையுடன் சாலையில் ஒரு நபர் வலம் வந்துள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
சத்யநாரயணபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீநகர் காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ் கொடுத்த தகவல்படி, “பிரதீப் குமார், மணிகிராந்தி (23) என்கிற தனது மனைவியை, தனது வீட்டுக்கு அருகிலேயே கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது தலையைத் துண்டாக வெட்டி, சாலையில் நடந்து சென்றுள்ளார்” என்று கூறியுள்ளது.
ஸ்ரீநகர் காலனியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், பிரதீப் குமார் துண்டிக்கப்பட்ட தலையுடன் வலம் வருவது தெரிகிறது. பிரதீப் குமாரைப் பார்க்கும் அக்கம் பக்கத்துக்கு மக்கள், பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடுவதும் தெரிகிறது. மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை பிரதீப், அருகிலிருந்த ஓடை ஒன்றில் வீசிவிட்டு, அருகிலிருந்த சத்யநாரயணபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார்.
இது குறித்து துணை கமிஷனர் விஜய் ராவ், “துண்டிக்கப்பட்ட தலையை தேடும் பணி நடந்து வருகிறது. மீதமிருக்கும் உடல் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரதீப், மணிகிராந்தியை 5 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டார் என்றும், இருவருக்கும் இடையில் தொடர்ந்து பிரச்னை நிலவி வந்தது என்றும் தெரியவந்துள்ளது.
சில காலத்துக்கு முன்னர் மணிகிராந்தி, பிரதீப் தன்னைத் துண்புறுத்துவதாக புகார் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் பிணையில் வெளிவந்த பிரதீப், மணிகிராந்தியைப் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.