Telangana: தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தியாவையே கலங்கடித்த இச்சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ். இன்று அந்த 4 பேரையும் குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்ய போலீஸ் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது 4 பேரும் தப்பித்துச் செல்ல முற்பட்டதாகவும், அதனால் என்கவுன்ட்டரில் அனைவரையும் கொன்றதாகவும் போலீஸ் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
முன்னதாக இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் குறித்து ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறான பதிவை இட்டுள்ளார்.
குன்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவர் முகநூலில் பதிவிட்ட கருத்து வைரலாக பரவியது. கடந்த நவம்பர் 29 ஆம் தேதி, அவர் இப்படிப்பட்ட பதிவை இட்டுள்ளதாக தெரிகிறது. தான் கூறிய கருத்தால் பிரச்னை வரும் என்று அஞ்சிய அந்த மாணவர், தனது முகநூல் பக்க கணக்கையே நீக்கியுள்ளார் என்று கூறுகிறார் ராசகோண்டா போலீஸ் கமிஷனர், மகேஷ் எம் பகவத்.
டிசம்பர் 1 ஆம் தேதி, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸ், உடனடியாக மாணவரைக் கைது செய்தது.
இதற்கு முன்னரும், பெண் மருத்துவர் பற்றி அவதூறான கருத்துகளைப் பகிர்ந்திருந்த 3 நபர்களை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கைது செய்துள்ளது போலீஸ். மேலும் காவல் துறை தரப்பு, பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் குறித்து யாரும் அவதூறு கிளப்பும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிகள் இடக் கூடாது என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.