கொரோனா வைரஸின் மையமாக இருந்த சீனாவில் தற்போது அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சீன அரசு தரப்பும், பல்வேறு இடங்களில் விதித்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஒரு ஃபர்னிச்சர் நிறுவனம், கொரோனா பரவலால் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அப்படி திறந்த நிறுவனத்தில், ஊழியர்களை குஷிப்படுத்தும் நோக்கில் ‘கிஸ்ஸிங் கான்டெஸ்ட்' எனப்படும் முத்தமிடும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், 10 இளம் ஜோடிகள் அழைக்கப்பட்டு முத்தங்களைப் பரிமாறிக் கொள்ள தெரிவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோடிகளுக்கு இடையே கண்ணாடி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கான்டெஸ்ட் குறித்தான வீடியோ சீனாவில் படுவைரலாக மாறியுள்ளது. அதே நேரத்தில் தற்போதுதான் கொரோனாவிலிருந்து சீனா விடுபட்டுள்ளது என்றும், அதற்குள் இப்படி சமூக விலகலை மதிக்காத வகையில் கான்டெஸ்ட் நடத்தப்பட்டது தவறு என்றும் பலர் கூறி வருகின்றனர்.
சுசோவ் நகரத்தில் உள்ள ஃபர்னிச்சர் உற்பத்தி நிறுவனமான ‘யூவேயா'வில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கான்டெஸ்ட்டில் பங்கேற்றப் பல ஜோடிகள், ஏற்கெனவே திருமணமானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்தின் உரிமையாளரான மா, “எந்தவித தொற்றும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் ஜோடிகளுக்கு இடையில் கண்ணாடி வைக்கப்பட்டது.
சிலர் திருமணம் முடித்து எங்கள் நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர்கள். கொரோனா நோய் தொற்றானது அனைவரையும் படபடப்பாக்கியுள்ளது. அதனால் யாரும் ரிலாக்ஸ் செய்ய முடியவில்லை. இதனால் உற்பத்தியில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது.
அதனால்தான் இந்த முத்த கான்டெஸ்டுக்கு ஏற்பாடு செய்தேன். ஜோடிகளுக்கு இடையில் எந்த வித தொற்றும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் கண்ணாடியை வைத்தோம். அது கிருமிநாசினி மூலம் பல முறை சுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது,” என்று விளக்கம் கொடுக்கிறார்.
மா, இப்படி விளக்கம் சொன்னாலும் இந்த கான்டெஸ்ட் குறித்துப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.