This Article is From Dec 29, 2018

‘எனக்கு ஆஸ்கர் கொடுக்கணுங்க..!’- மன்மோகன் வேடத்தில் நடித்தவர் ஆசை

முன்னாள் பிரமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

இந்தப் படத்துக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது

ஹைலைட்ஸ்

  • அனுபம் கேர், மன்மோகன் வேடத்தில் நடித்துள்ளார்
  • ஆஸ்கருக்குத் தகுதியான திரைப்படம் இது, அனுபம் கேர்
  • தேர்தலுக்கு முன்னர் இந்தப் படம் வருவது மிகச் சரியானது, அனுபம் கேர்
New Delhi:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவி வகித்ததை வைத்து ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. இரண்டு நாட்களுக்குமுன்னர் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி தேசிய பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர், ‘இந்தப் படத்துக்காக எனக்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் இந்த டிரெய்லர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்துக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து இது குறித்து தெரிவிக்கையில், ‘மன்மோகன் குறித்து எடுத்துள்ளதாக சொல்லப்படும் அந்தப் படம் குறித்து நாங்கள் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதற்கு எதிராக போராடி தேவையில்லாத கவனத்தை பெற்றுத் தர விரும்பவில்லை. பாஜக வேண்டுமென்றே, நாங்கள் ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில், படத்தைத் தடை செய்யப் போவதாக வதந்தி பரப்பி வருகிறது. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்று தெளிவுபடுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், டிரெய்லரை பகிர்ந்து, ‘ஒரு குடும்பம் இந்த நாட்டை எப்படி 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்தது என்பதைப் பாருங்கள். டாக்டர்.மன்மோகன் சிங் ஒரு பகடைகாயாக பயன்படுத்தப்பட்டாரா. காங்கிரஸ் கட்சியின் உள்ளேயிருந்த கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படத்ததின் டிரெய்லரைப் பாருங்கள். வரும் ஜனவரி 11 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது' என்று பதிவிட்டுள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில் நேற்று NDTV-யிடம் அனுபம் கேர் பேசுகையில், ‘இந்தப் படம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் இப்போது மட்டும் பொங்குவது ஏன்?

முன்னாள் பிரதமர் பற்றி இருப்பதாலும், ஒரு அரசைப் பற்றி எடுத்திருப்பதாலும் தேர்தலுக்கு முன்னர் இந்தப் படம் வெளிவருவது மிகச் சரியானது. இந்தப் படத்துக்காக நான் அதிக மெனக்கெட்டுள்ளேன். நான் நடித்துள்ள 500-க்கும் மேற்பட்டப் படங்களில், இதுதான் மிகவும் கடினமானதாக இருந்தது. மன்மோகன் சிங் போல நான் நடித்திருப்பதற்கு பலர் பாராட்டுகின்றனர்.

ஆனால், அதை விடுத்து படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது. எனது நடிப்புக்காக ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வேண்டும். போராடுபவர்கள், அதற்காக வேண்டுமானால் போராடட்டும்' என்று கூறியுள்ளார்.

.